நாவாய் ஒப்பந்தம் - VII
காஃபியைக் குடித்து உணவையும் உண்டு இருக்கையில் அமர்ந்த ஹோம்ஸ் நடந்தததை விளக்க ஆரம்பித்தார். "உங்கள் இருவரையும் ரயிலில் ஏற்றி அனுப்பிவிட்டு அப்படியேக் காலாற நடந்து சர்ரேயின் (Surrey) காட்சிகளை ரசித்துக்கொண்டே மாலை தேநீருக்கு ரிப்ளி (Ripley) கிராமத்தில் ஒரு அழகான சிறிய உணவகத்தை சென்றடைந்தேன். அங்கேயே சற்று நேரம் தங்கிவிட்டு மறக்காமல் சில சான்ட்விச்சுக்களையும் கொஞ்சம் தேநீரையும் எடுத்துக்கொண்டு வோக்கிங்கிற்கு அந்தி சாயும் வேளையில் வந்து சேர்ந்தேன். ப்ரையர்ப்ரே வீட்டின் அருகில் வந்த சேர்ந்ததும் அந்த சாலையில், அது அதிக போக்குவரத்து இல்லாத சாலையாக இருந்தாலும், நடமாட்டம் குறைவதற்குக் காத்திருந்தேன். யாரும் இல்லை என்று உறுதிப்படுத்தியதும் வேலியைத் தாண்டி உள்ளேக் குதித்தேன்". "கேட் திறந்து தானே இருந்திருக்கும், மிஸ்டர். ஹோம்ஸ்! நீங்கள் ஏறிக் குதிக்க வேண்டிய அவசியமில்லையே!" என்றான் பெர்சி. "இந்த மாதிரி விஷயங்களில் எனக்கு குறிப்பிட்ட எண்ணங்கள் சில உண்டு, மிஸ்டர். பெல்ப்ஸ். மூன்று தேவதாரு மரங்கள் ஒன்றாய் நிற்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்து அதன் பின் இருக்கும் இடத்தில் நான் வ...